திங்கள், 28 ஜூலை, 2014

பயணம்: பல்லவபுரம் சந்தையும் இனிப்புக் கிழங்கும்...

சிறு குறிப்பு

சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்று பல்லவபுரம். பேச்சு வழக்கிலும், பெரும்பாலான ஆவணங்களிலும் தற்போது பல்லாவரம் என்று அழைக்கப்படுகிறது. அரசின் பெயர் பலகையிலும், ஆவணங்களிலும் மட்டுமே பல்லவபுரம் என்று குறிப்பிடப்பட்டாலும், பேருந்துகளில் பல்லாவரம் என்று  குறிப்பிடுவதின் மர்மம் புரியவில்லை.  

பல்லவபுரம் என்றே நாமும் மெய் பெயரால் அழைக்கலாம். மருவியது வேண்டாமே. இந்த ஊர் இன்று நேற்றல்ல 7ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றின் பக்கங்களில் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. பல்லவர்களின் பங்களிப்பின் விளைவாக பல்லவபுரம் என்று இந்த ஊர் இன்றளவும் பெயர் பெறுகிறது. கால ஓட்டம் இந்த ஊரை மேலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றிவிட்டது.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் இவ்வூரின் ஒரு பகுதியில் பயிற்சிக்களமாக உருவாக்கப்பட்ட இடம், தற்போதும் நமது இராணுவ பயிற்சித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் அனைவரும் அறிந்த விமான நிலையம் இதன் எல்லையில் அமைந்திருப்பது, ஊரினை உலக வரைபடத்திலும் குறிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சந்தை

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. அது வெளிப்படுத்தப்படாமல் மறைந்தோ அல்லது மறந்தோ போயிருக்கலாம். ஆனாலும் ஒரு சில பெருமைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றி வைத்திருக்கும். அப்படிப்பட்ட பெருமைகளுள் ஒன்று பல்லவபுரத்தில் கூடும் வெள்ளிக்கிழமை சந்தை. 

ஒரு நூற்றாண்டை நெருங்கும் மரபுவழிமிக்க இச்சந்தை, இன்றும் பெருமளவில் மக்கள் கூடும் இடமாக நிலைபெற்றிருக்கிறது. சந்தை குறிந்து அறிந்திருந்தாலும் நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு பொன்னேரியைச் சேர்ந்த நண்பரால்  சாத்தியமாயிற்று.

 ஊரகப்பகுதியிலிருந்து வந்தாலும், நகர வாழ்வின் அம்சங்கள் நமது பார்வையை நகரின் இயக்கம் சார்ந்தே நம்மை பயணிக்க வைக்கிறது. அதே போன்று சந்தையில் நடை போட ஆரம்பித்தது முதல், இங்கேயும் இப்படியா என்ற மகிழ்ச்சியை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் சந்தையின் சந்தடிகளைவிட பல்வேறு பொருட்களின் விற்பனையின் தாக்கம்.

வளம் தரும் செடிகள்

சந்தையின் ஆரம்பத்தில் காலணிகள், கரும்புச்சாறு கடை, பழக்கடைகளை கடந்து சென்றவுடன் பூஞ்செடிகள், மர நாற்றுகள் என பசுமையினை பரப்பும் செடிகளிண் விற்பனை மும்முர நடந்துகொண்டிருந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றோரு புறம் இது சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்ப தவறவில்லை. 

ஏனெனில் சென்னை வீடுகளால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. சாலை ஓரங்களில் மரங்கள் இருந்தாலும், வீட்டில் மண் தரையையோ, பல வகைப்பட்ட செடி வகைகளையோ காண்பது அரிதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ரோஜா செடிகளை மட்டுமல்லாது மல்லிகை கொடி நாற்றுகளையும், மாதுளம் செடிகளையும் மக்கள் வாங்குவது கண்டு, தனிப்பட்ட நகர பிம்பங்களையும் கடந்து, இங்கே இயற்கையை உயிரோடு வைத்திருக்கும் மனிதர்களின் மாண்பு மகிழ வைத்துவிட்டது.

மின்னணு சாதனங்கள்

சந்தை ஏன் நிலைபெற்று இருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக விற்பனைக்கு வரும் பொருட்களின் பங்களிப்பே முழு முதல் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. வெட்ட வெளியில் எல்.சி.டி. தொலைக்காட்சி 5,000 முதல் கிடைப்பது ஆச்சரியத்தை அளித்தது. கனிணி, பழைய அலைபேசிகள், கனிணி சார்ந்த பொருட்கள் என மின்னணு பொருட்களும் எளிதாக குறைத்து பேசி வாங்கும் வகையிலே உள்ளது.

இனிப்புக் கிழங்கு

மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இனிப்புக் கிழங்கு. பார்வைக்கு சாதாரணமாக இருந்தால் எளிதாக கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அதன் பிரம்மாண்டம் கண்களை அகல விரிய வைக்கிறது. ஏறத்தாழ இரண்டே கால் அடி உயரமும், முக்கால் அடி விட்டமும் கொண்ட உருண்டை வடிவத்தில் இருந்தது அந்தக் கிழங்கு. கொல்லி மலையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், அது முழு விளைச்சலை அடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் விற்பனையாளர் கூறினார்.

இந்த இனிப்புக் கிழங்கு மூட்டு வலி,  உடல் சூடு, செரிமானப் பிரச்சனைகளை தீர்ப்பதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து வாங்குவதாகக் கூறினார். இரண்டு கிழங்குகளை வைத்துள்ள இவர், மூர் சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதாகக் கூறினார். 20 நாட்களுக்கு கெடாமல் இருப்பதால் விற்பனையில் பிரச்சினை இருப்பதில்லையாம். 

ஒரு சிறு துண்டின் விலை 5 ரூபாய். ஆளுக்கொரு துண்டினை வாங்கி உண்டோம். இனிப்பாகவே இருந்தது. அதன் இனிப்பு சுவை இளநீரின் சுவையைப் போன்று இருந்தது. இருந்தாலும் அந்த இனிப்பின் மேல் எனக்கு சற்று சந்தேகமே....

மேலும்...

புதிய, பழைய பாத்திரங்கள், பீரோக்கள், கட்டில்கள், மர மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள், விளையாட்டுப் பொருட்கள், மளிகை சாமான்கள், நடமாடும் தேநீரகங்கள், பழைய காசுகளை விற்பவர்கள், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள், கோழிகள், பறவைகள், அலுவலக உபயோகங்களுக்கான பழைய பொருட்கள், சுத்தியல், கடப்பாறை போன்ற இரும்பு பொருட்கள், கயிறு வகைகள், இசை உபகரணங்கள் என சந்தை பல்வேறு  பொருட்களால் நிரம்பி வழிகிறது.

வழி

பல்லவபுரம் ரயில் நிலையத்திலிருந்து நடந்தால் 5 நிமிடத்தில் சந்தையை அடையலாம். விமான நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் நடந்து செல்லலாம். தண்டவாளத்தின் அருகே தடதடக்கும் ரயில் ஓசையினை மறையச் செய்யும் வகையில் சந்தையின் குரலோசைகள் இருக்கின்றன.

காண ஆவலா?

சந்தை 1 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கடைகளாலும், சாலை முழுவதும் மக்களுமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுகிறது.


வெளிச்சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கும் கட்டணம்



ஞாயிறு, 13 ஜூலை, 2014

மகிழ்ச்சியும், வெற்றியும் பெற சிந்தனை, சுதந்திரத்தை சீர்பட அளிப்போம்



பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்தும், சூழ்நிலைகளைப் பொறுத்தும் மாறுபட்ட அர்த்தங்களைத் தரும். ஆனால் ஒரு வார்த்தை அனைத்து இடங்களிலும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வார்த்தை தான் சுதந்திரம்.
கண்காணிப்பு
ஒரு இயந்திரமானது, அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ப மனித உதவியோடு செய்து முடிக்கின்றது. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான பணியை செய்கிறது. அவ்வவ்பொழுது ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், தேவையான பொருள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
 
செயல்பாடு

மனிதன் தான் கடக்கும் நிகழ்வுகளை, கோர்க்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட வேலைகளை ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டு செய்கிறான். அந்த வேலைகள் திட்டமிடப்பட்ட செயல்களை நோக்கி அவனை நகர்த்துகின்றன. ஒரே செயலை மறுபடி மறுபடி செய்யும்பொழுது ஒரு வகையில் அது எளிதான வேலையாக இருந்தாலும், பலருக்கும் அது விருப்பமிகு வேலையாக இருப்பதில்லை. ஏனெனில் மூளை ஒரே வேலைக்கு மட்டுமே தன்னை தயர்படுத்திக்கொள்வதால் வேறு செயல்பாடுகள் குறித்த சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக ஒரு கைதியின் நிலையில், ஒரே செயல்பாட்டை செயலாற்றும் மனிதனின் சிந்தனை அறிவும் ஒரு குறுகிய செயல்பாட்டிற்குள்ளாக முடங்கிவிடுகிறது.
 
இதனை உணர்ந்தவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகவும், தான் சார்ந்த நிறுவனம் அல்லது இடத்தின் வளர்ச்சிக்காகவும் புதிய செயல்பாடுகளை நோக்கி தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதுவே சுதந்திரத்தை நோக்கிய பயணம். மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையும் இதைப் போன்றுதான் உள்ளது.
 
நெருக்கடி

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடி, மாபெரும் பணிகளை செய்யக்கூடிய நபருக்கு இருக்கக்கூடிய  நெருக்கடிகளை விட மிகவும் அதிகம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் மாணவர்கள் காலை எழுந்தது முதல் படிப்பு, படிப்பு என இரவு தூங்கும் வரை படிப்பை தவிர எதுவும் இல்லை என்ற நிலையிலேயே எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை 14 ஆண்டுகள் கடந்துவிடுகின்றனர்.
 
பள்ளிக்காலத்தில் அதீத கட்டுப்பாட்டுடன் வளரும் மாணவர், கூண்டிலிருந்து விடுபட்ட பறவையானது உலகை மகிழ்ச்சியுடன் வலம் வருவதைப் போன்று, கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கின்றான். இந்த மகிழ்ச்சியும் பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
 
எது சுதந்திரம்?

சுதந்திரம் என்ற ஒன்று அது கிடைக்கும் நபரைப் பொருத்து மாறுபடுகிறது.   ஒரு கட்டுப்பாடற்ற இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், இனிப்புகளை உண்பதையே இலட்சியமாகக் கொண்ட ஒரு சிறுவனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், நன்மை செய்வதற்காக போராடும் ஒரு போராளிக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு.
 
சுதந்திரம் என்பது முழுவதுமாகக் கிடைக்கும்பொழுது அது தவறுகளுக்கே வழிவகுக்கும் என்பது நாம் அறிந்ததே. அளிக்கப்படும் சுதந்திரம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும்பொழுதே அதற்கான உண்மையான அர்த்தம் கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அனைத்து தரப்பினரும் இதுகுறித்து ஏங்கினாலும்,  அதிகமான ஏக்கத்திற்கும், வாய்ப்பிற்கும் ஏங்குபவர்களாகவும், அளிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருப்பவர்கள் குழந்தைகளே.
 
ஏனெனில் கற்கவேண்டியது பாடப்புத்தகத்தை மட்டுமல்ல, அதையும் கடந்து இருக்கிறது என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் பொருளாதார நோக்கம் கொண்டவர்களாக  மட்டுமே குழந்தைகளை உருவாக்குகிறோம். அவர்களின் இதர ஆசைகளை நிராசைகளாக்கி விடுகின்றோம்.
 
முன்னுரிமை

ஒவியனாக வேண்டும் என்று ஆசைப்படும் மாணவனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம், ஆதரவை விட பொறியியல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், ஆதரவு அதிகமாக இருக்கிறது. இருவரையும் ஒரே தராசில் இருபுறமும் வைக்க தயங்குகிறோம். வருமானமே ஒரு மனிதனின் தன்மையை வெளிப்படுத்துவதாக எண்னுகிறோம். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது என்று நம்மை நாமே பணத்திற்கு அடிமையாக்கி விடுகிறோம்.
 
படிப்பையும் கடந்து

குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே முக்கியமல்ல என்பதை உணர்த்தி உறவுகளோடு பழகுவதற்கான உரிமையை அளிப்போம். நமது உறவினர் யார் என்பதனை அறிய பள்ளிக்கு விடுப்பு எடுத்து உறவுகளின் சுக, துக்கங்களில் அவர்களையும் பங்கெடுக்க வைப்போம். ஏனென்றால் இன்றைய குழந்தைகளுக்கு அனுதினமும் சந்திக்கும் வெயில் குறித்த புரிதல்கள் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தத்தை அளிக்கக்கூடியது.
 
வாழ்க்கையின் நிகழ்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களின் கருத்துக்களை அனுதினமும் கேட்டு வந்தாலே அவர்கள் வாழ்வு சிறக்கும். வருங்காலம் அவர்களை பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தள்ளாமல் மகிழ்ச்சியை நோக்கி தள்ளும். கோடி ரூபாய் கொடுத்தும் கிடைக்காத மன நிம்மதி, சிறுசிறு நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும்.
 
சீர்பட செதுக்குவோம்

குழந்தைகளுக்கான சுதந்திரம் அவர்களின் சிந்தனையில் தொடங்குகிறது. சிந்தனைகளை சீர்பட செதுக்கினால் அழகான வாழ்வு மலரும். ஒரேயடியாக கட்டிப்போட்டால் அது மழுங்கிப்போகும். போர்க்களத்தின் சண்டையில் கூர்மையிழந்த வாளுக்கு இருக்கும் மதிப்பானது, துருப்பிடித்து கிடக்கும் வாளுக்கு கிடைப்பதில்லை. மாலையும், மரியாதையும், புகழ் பாடல்களும் போர் வாளுக்கே உண்டு. அதனை உணர்ந்தவர்களாக தேவைப்படும் சுதந்திரத்தை அளித்து குழந்தைகளை வளர்ப்போம்.
- இலா. தேவா 
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25108&cat=1

புதன், 25 ஜூன், 2014

விளையாட்டாகிப் போன விளையாட்டு




"காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா" என்று மகாகவி பாரதியார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாடினார். ஆனால் காலை, மாலை, இரவு என அனைத்து காலங்களும் படிப்பாக மட்டுமே ஆகிவிட்டது. இந்த நிலை உருவாக என்ன காரணம்?

தமிழகத்தைவிட  குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இத்தாலி, ஸ்வீடன், போலந்து, பெலாரஸ், பின்லாந்து போன்ற நாடுகள்  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவிலான தங்கப் பதக்கங்களை பெற்று வருகின்றன. ஆனால் அதனை விட பன்மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தகுதிச் சுற்றுகளுக்கே தகுதி பெற முடியாமல் தடுமாறும் நிலையில்தான் இன்றளவும் இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் அடிப்படையிலான தரவரிசையில் 53வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் இடப்பரப்பளவில் 7 வது இடத்திலும், மக்கள் தொகையின் அடிப்படையில் 2வது இடத்திலும் இருக்கும் நமக்கு இது பெரும் அவமானம் இல்லையா.

உலகக்கோப்பை

கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் பெரும் உற்சாகத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது. போட்டிகள் குறித்து ஒவ்வொரு நாளும் அலசி, ஆராய்ந்து வரும் நாம், இந்தியா இதில் பங்கெடுக்க முடியாமல் போனது குறித்து கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து ஒரு வீரர் உருவாக வேண்டும் என நினைத்திருப்போமா.

"விளையாடினால் உடலில் அடிபடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். வெயில் அதிகம்" என்று கூறும் அதே பெற்றோர்தான், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செலவதற்கே மோட்டார் பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பதும் "உடல்நலமே பெரும் சொத்து" என்பதும் நம் முன்னோர்கள் கூறிச்சென்ற உடல்நலம் குறித்த பழமொழிகள். ஆனால் இன்று நாம் சுவரை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்து வருகின்றோம்.

உடற்பயிற்சி

நிகழ்கால இந்தியா "இளம் இந்தியா" என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் வருங்கால இந்தியாவை "நோய்மிகு இந்தியா"வாக மாறிவிடக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 45, 000 கோடி ரூபாய். ஆனால் இதில் பள்ளிக்கூடங்கள் சார்ந்த  உடற்பயிற்சிக்கு எத்தனை ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.

12 முதல் 16 வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம். இப்பருவத்தில் மாணவர்களை நெறிப்படுத்த உடற்பயிற்சி அவசியம் தேவை. ஆனால் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே பள்ளிப் பருவத்தை கடந்து செல்லும் தலைமுறையாக, இந்தத் தலைமுறை இருக்கிறது.

மாணவர் வளம்

தமிழகம் முழுவதும் 56,573 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.  இந்த எண்ணிக்கை மாபெரும் சாதனைகளை படைக்கக்கூடிய அளவில்லா சக்தி கொண்டது. ஆனால் இந்த சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளை தவிர்த்து, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

250 மாணவருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக 180 மாணவர் இருந்தால் இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில் உள்ளது.

ஆசிரியர்கள் இல்லை

23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது. அரசினர் நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்கள் 23,500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையினாலும், விளையாட்டு உபகரணங்கள், உதவிகள் போதுமான அளவில் வழங்கப்படாததும் அரசிற்கு பொருளாதார இழப்பின்மை போன்று தெரிந்தாலும். அனைத்துவிதமான திறமைகளை கொண்டிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழிகாட்டுதல் இல்லாமல் விளையாட்டினை  மறந்தேவிடுகின்றனர்.

வேண்டுகோள்

கடந்த 2013 ஜூன் மாதத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கல்வித்துறை அமைச்சரிடம் "விளையாட்டுக்கென தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம்" என, பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.  கருத்துக்கள் குறித்து எந்த அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது?

கலைக்கல்லூரிகள்

கல்லூரிகள் 2 விழுக்காட்டு இடத்தை விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. இதனை பல்கலைக்கழகங்களும், யூ.ஜி.சி.யும் கண்காணிக்க வேண்டும். அதிலும் ஒரு சில கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள் என்றால் "இந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது, அதனால் இந்த படிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று வேறு ஒரு பாடப்பிரிவை திணிக்கும் நிலை உள்ளது.

இதானால் விளையாட்டு ஆர்வத்துடன் கல்லூரியில் படிக்க வரும் மாணவர் "படிப்பா, விளையாட்டா" என்ற குழப்ப நிலையில் இறுதியில் விளையாட்டை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

முக்கியத்துவம்

"அனைத்து மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு மைதானங்களும் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்க முன்வர வேண்டும்." என்கிறார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர்.

பொறியியல் கல்லூரிகள்


 தங்கள் மாணவர்கள் படித்து வெற்றியோடு வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான கல்லூரிகளும், திறனுள்ளவர்களாக, வேலைவாய்ப்பை பெற தகுதியுள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்று சில கல்லூரிகளும் நினைக்கின்றன. ஆனால் மிகச் சொற்பமான பொறியியல் கல்லூரிகளே "விளையாட்டு வீரர்களாகவும் திகழ வேண்டும்" என்று மிக ஆர்வத்துடன் பயிற்சியை வழங்கி, போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள்.

550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அரசு வழங்கும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 500 இடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு கல்லூரிக்கு ஒரு இடம் என்ற அளவில் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்லூரிக்கு ஒரு விளையாட்டு வீரர் இருந்தால் போதுமா? ஒரு விளையாட்டினை விளையாடுவதற்கு 10 பேருக்கு மேற்பட்ட விளையாட்டுக்குழு தேவைப்படுகிறது. பிறகு எப்படி விளையாட்டு மேம்படும்.

மருத்துவக் கல்லூரிகள்

உடல் நலமிக்க இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மற்றவர்களின் உடல்நலம் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க கற்றுத்தரும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விளையாடுவதற்கான வாய்ப்புகளை அளிப்பதில் பின் தங்கியே இருக்கின்றன.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடின் மூலமே, மாணவர்களுக்கு மருத்துவ துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை உணர்ந்துகொள்ளலாம்.
சரிவிகித வளர்ச்சி
"அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும்" என்ற நோக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதியை முதல்வர் ஒதுக்கீடு செயததாக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கல்வி வளர்ச்சி மட்டும் தனியாக இருப்பது, ஒரு கை மட்டும் நல்ல வளர்ச்சியையும், மற்றொரு கை குறைவான வளர்ச்சியும் பெற்றதற்கு ஈடாகும். உடல்நலம் சார்ந்த உடற்பயிற்சியும் இணைந்தால்தான் அது சரிவிகித வளர்ச்சி.
2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக  பட்ஜெட்

உயர் கல்வித்துறை - ரூ.3,627 கோடி
பள்ளி கல்வித் துறைக்கு - ரூ.17,731 கோடி
இலவச புத்தகங்கள்- ரூ.264.35 கோடி 
இடைநிற்றலைக் குறைக்க - ரூ.55.11 கோடி 
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் - ரூ.585.17 கோடி  
இலவச மடிக்கணினி - ரூ.4,200 கோடி 
உடற்பயிற்சி & உபகரணங்கள் - ?

என்ன செய்யலாம்?
பள்ளி, கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு விளையாட்டு வீரர்களையும் அழைத்து வந்து வீரர்களுக்கு மரியாதையையும், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் கொண்டு வரவேண்டும்.
சி.எஸ்.ஆர். எனப்படும் "கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி" நடவடிக்கைகளில் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொண்டு வருவதற்கு விதிமுறைகள் கொண்டு வரவேண்டும். பெரு நிறுவனங்கள் தங்கள் நிதியில் குறிப்பிட்ட பங்கினை விளையாட்டு மன்றங்களைத் துவக்கி வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உலகத் தரத்தில் புதிய மைதானங்களை உருவாக்க வேண்டும்.
நலிவடைந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டு அவசியம் என்ற நிலையைக் கொண்டு வந்து, மாணவரின் மதிப்பெண் சான்றிதழில் அதனை பதிய வேண்டும்.
வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வேறு மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்களை அழைத்து வரும் நிலையை மாற்றி, விளையாட்டு வீரர்களை பணியமர்த்த வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து துறையிலும் வேலைவாய்ப்பினை அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல் நலம் எனும் மாபெரும் பொறுப்பு அனைவருக்கும் இருந்தாலும், அதனை பேணிக்காப்பதில் அரசாங்கமே முக்கிய பங்காற்றுகிறது. தொற்று நோய் பரவினாலும், தொற்றா நோய் இருந்தாலும் அரசாங்கமே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன் நின்று நடத்தவேண்டிய கடமை இருக்கிறது. எதிர்காலமானது, நலமுடன் கூடிய வெற்றி பதக்கங்களை நாட்டுக்கு அளித்து, உலக அளவில் பெறுமை சேர்க்கும் வீரர்களைக் கொண்டதாக நாடு அமையட்டும்.
- இலா. தேவா
கல்விமலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24723&cat=1

திங்கள், 23 ஜூன், 2014

உற்சாகமாக வாருங்கள்: பொழுதுபோக்குகளையும் வருமானமாக்கலாம்



குழந்தைகளின் மனதில் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி என்று குறிப்பிட்ட ஒரு சில துறைகள் சார்ந்த கனவுகளை விதைக்கிறோம்.
ஆனால் பெரும்பாலும்  அவர்கள் எதிர்காலத்தில் அதனையும் கடந்த ஏதோ ஒரு பணியில்தான் ஈடுபடுகிறார்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுக்கே உண்டான தனிப்பட்ட கனவுகளையும், பொழுதுபோக்குகளையுமே எதிர்காலமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் வெற்றி கண்டு வருகிறார்கள்.

ஒவியம் வரைய வேண்டும் என்று நினைத்த பலர் அவர்கள் தங்கள் ஆசைகளுக்கு தொடர்பில்லாத ஒரு பணியில் வேலை பார்த்து வருவார்கள். விளையாட்டே எதிர்காலம் என்று நினைத்தவர்கள், சூழ்நிலைகளால் விளையாட்டையே மறந்துவிட்டிருப்பார்கள். ஆனால் நிகழ்காலம் அனைவருக்குமான வாய்ப்புகளை திறந்துவிட்டிருக்கிறது. தாங்கள் நினைத்தவற்றை சாதிப்பதற்கான வழிகள் முன்பை விட எளிதாகக் கண்டுகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

பொழுதுபோக்கு துறைகளாக இருந்தாலும் அத்துறையில் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவும், பொருளாதாரத்தை பெருக்கக்கூடிய வணிக அறிவும் தேவைப்படுகிறது. அதனை அளிக்கும் வகையில் பயிற்சிக்கூடங்கள் அல்லது துறை சார்ந்த வல்லுநர்களிடம் நேரடி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தங்கள் எண்ணங்களை நிகழ்வுகளாக்கி சாதனைகள் புரியலாம்.

பொழுதுபோக்குகளை வணிகமாக்க வாய்ப்பளிக்கும் சில துறைகள்

புகைப்படக்கலை
நாடகம்
பங்குச்சந்தை வணிகம்
செயலாற்றும் இயந்திரங்கள் (ரோபோட்டிக்ஸ்)
அசைவூட்டம் (அனிமேஷன்)
இசை
உடற்பயிற்சி
விளையாட்டு
அழகுக்கலை


- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24700&cat=1

ஞாயிறு, 15 ஜூன், 2014

மாற்றங்கள்: நிகழ்வுகளும், விளைவுகளும்

\


மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை கட்டமைப்பை பல்வேறு சூழ்நிலைகளில் நாம் கேட்டிருக்கலாம்.
அந்த வார்த்தைகளை சிந்தித்தும் இருக்கலாம். மாற்றம் என்பது தொழில்நுட்பத்திற்கும், உடை,  வாய்ப்புகள் போன்றவற்றிற்கு மட்டுமே என்பது பலரது எண்ணமாக இருக்கலாம். அல்லது பெரிய மாற்றங்களால் மனது கவலை கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமல் அதன் சாராம்சத்தையோ  பயன்படுத்தியிருக்கலாம்.
எவை மாற்றங்கள்?
அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் மாற்றங்கள் என்பது உடனடியாக நம்மையே மாற்றிப்போடும் பெரும் நிகழ்வுகள் மட்டுமல்ல. நம்மை சிறிது சிறிதாக செதுக்கும் சின்னஞ்சிறிய கருத்துக்கள், நிகழ்வுகள், புரிதல் போன்றவையும் மாற்றங்களே. சிறிய வயதில் பிடித்த உணவு, பொழுதுபோக்குகள், பயணங்கள் போன்றவை இப்போதும் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும், அதனை அப்படியே தொடர்ந்து பின்பற்றுவதில்லை. நம்மிடையே துரித உணவுப் பழக்கங்கள், நவீன தொழில்நுட்பப் பொழுதுபோக்குகள், பெரும் ஓய்வு என தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

பெரும்பாலும் மாறுதலுக்கு மனம் எப்போதும் தயாராக இருப்பதில்லை. ஒரு சில நேரங்களில் முற்றிலும் மறுக்கும் நிலையிலேயே மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால், அரைகுறை மனதுடன் மாற்றங்களை ஒரு வித சந்தேகப் பார்வையின் வழியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் செயல்களே வெற்றிகரமான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.


மாற்றங்கள் நம்மை மாற்றும்


சின்ன  மாற்றங்கள் கூட பெரிய மாறுதலை உருவாக்கும். ஒரு சிறு தீக்குச்சியிலிருந்து வரும் தீயானது பெரும் வெளிச்சத்தை உருவாக்குகிறது. சின்னஞ்சிறு விதையிலிருந்து வெளிவரும் விதையிலைதான் பெரும் ஆலமரத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நாம் அறிந்த முதுமொழி. எனவே எந்த ஒரு செயலையோ, நிகழ்வையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மண்ணில் விழும் முதல் மழைத்துளியானது கோடைகாலத்தின் வெப்பத்தை எல்லாம் தணிக்கும் பெரு மழையாய் மனம் எண்ணும் வகையில் ஆனந்தத்தைத் தருகிறது.


வித்தியாசத்தை உணரவேண்டும்


மாற்றங்கள் நீதி நெறிகளின்படியும், ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கானதாகவோ அல்லது நேர்மையான வழியில் பொருள் ஈட்டித்தருவதாகவோ இருக்கலாம். தவறான பாதையில் நம்மை இட்டுச்செல்லும் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன்னுரிமையோ அல்லது ஆதரவையோ தருவது அழிவிற்கு மட்டுமே இட்டுச்செல்லும். அதேபோன்று ஒருவர் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதற்காக நாமும் அதனை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் மருத்துவரின் கையில் இருக்கும் கத்திக்கும், கயவனின் கையில் இருக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசம் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


அன்றும், இன்றும்


வாழும் நாட்கள் அனைத்தும் நாம் நினைத்தாலும் ஒன்றுபோல் இருப்பதில்லை, இருக்காது. ஆனால் வழக்கமான ஒரு சில நடைமுறைகளில் ஒரு சிலவற்றை மாற்றாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பலர் இருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இருவர் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள் "ஆளே மாறிவிட்டாயே". மாறிவிட்டாயே என்பதற்கான அர்த்தம், உடல் ரீதியானதாகவோ அல்லது உடை ரீதியானதாகவோ அல்லது வாழ்க்கை நடைமுறைகள் சார்ந்ததாகவோ இருக்கலாம். இளம் வயதில் பிடித்தவை, தற்பொழுது வெறுப்புக்குரியதாகவோ அல்லது கடந்த காலத்தின் சிறு பிள்ளைத்தனமான ஆசையாகவோ மாறி இருக்கலாம்.


மாறாமல் இருப்பதும் நல்லதே


எனவே ஒரு மாற்றம் குறித்து முடிவெடுக்கும்பொழுது கடந்தவை, எதிர்கால சூழல்கள் என அனைத்தையும் சிந்தித்து தெளிவான முறையில் மாற்றங்களை நோக்கி சென்றால் அதுவே வளர்ச்சியும் வெற்றியுமாகும். மாற்றங்கள் அனைத்திற்கும் தேவை என்பது போன்று தோன்றினாலும், ஒரு சிலவை மாறாமல் இருப்பதுதான் வருங்காலத்திற்கு நாம் கொடுக்கும் சிறப்பான வரவேற்பாக இருக்க முடியும். குறிப்பாக சத்தான உணவுப்பழக்க வழக்கங்கள், சூழலுக்கு ஏற்ற உடை, இயற்கையோடு இணைந்த வாழ்வு மற்றும் உறவுகளின் தொடர்ச்சி ஆகியவை மாறாமல் இருப்பது வாழ்வை மாறாத மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.


- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24524&cat=1

சனி, 7 ஜூன், 2014

முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்



வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
நல்லவையும், கெட்டவையும் நம் முன்னால் நமக்கு தெரிந்தவாறே இருக்கின்றன. அதனை தேர்ந்துகொள்வதும், தேர்ந்துகொள்ளாததும் நம் உரிமை என்றாலும், அதனை நமக்கானதாக்கிக்கொள்வது பல நேரங்களில் நமக்கு விருப்பப்படாமலே நிகழ்ந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை. காலமும், சூழ்நிலைகளும் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டெ இருக்கிறது.
காரணிகள்
தேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நமதாக இருந்தாலும், அதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தாக்கம் அதிகமான பங்கினை வகிக்கிறது. தெளிவாக, சுயமாக முடிவெடுப்பவர்கள் சுற்றி இருப்பவர்களைக் குறித்து தெளிவுடன் இருப்பதால், தங்கள் தேர்வுகளை சிறப்பாக அமைத்து, வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படி முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே.
தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்களின் எண்ணங்களையே தனது முடிவுகளாகக் கொண்டவர்கள், முடிவுகள் தவறானவுடன் சுற்றி இருப்பவர்களைக் குறை கூறுபவர்களாக இருக்கிறார்கள்.  முடிவெடுப்பதில் பல காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது தேவைகள் குறித்த கடந்த கால, எதிர்காலங்கள். முடிவெடுக்கும்  சூழ்நிலையில் உள்ள கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் என யாவும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுப்பதற்கு துணை புரிகிறது. அதனால் விளையும் நன்மைகள், பாதிப்புகள் என அனைத்தையும் சிந்தித்துதான் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.
ஆனால் எல்லோரும் இதே போன்று சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அந்த நேரத்தில் என்ன நினைவில் இருக்கிறதோ அதனை மையமாகக்கொண்டு முடிவெடுத்து, அதன் வழியில் சென்றே முடிவுகளை மாற்றிக்காட்டுபவர்களும் உள்ளனர். எடுத்த முடிவில் இறுதி வரை நிலைத்திருப்பதும் அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து முடிவினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதும், ஒருவரின் தனிப்பட்ட திறமை. 
வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
சிறு சிறு முடிவுகளையும் நாமே எடுத்து பழக வேண்டும். உதாரணத்திற்கு உணவகத்திற்கு செல்கிறோம் என்றால், "நீங்களே சொல்லுங்கள், நீங்களே சொல்லுங்கள்" என ஒருவர் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் இருவரும் ஒரே உணவை பெற்று உண்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவு குறித்த ஆசை மனதில் இருந்தாலும், மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலேயே தனக்கான தேவையை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்து, உண்ணும் உணவின் சுவையை நாவில் உணர மாட்டார்கள்.
இதே போன்றுதான் முடிவுகள் எடுக்கும்பொழுதும் தனக்கான சரியான தேவையை உணராமல், அடுத்தவரின் முடிவுகளை ஆராயாமல் தனதாக்கிக்கொள்ளும்போதும் நேரிடும். எடுக்கும் முடிவுகளுக்கு தானே பொறுப்பு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், பின்னோக்கி வராமல் முயற்சியோடு, தளராமல் முடிவுகளின் பாதையில் வெற்றி காண வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு என்பதை முழுதாக உணர்ந்தாலே போதும். முடிவுகள் எடுக்கும்பொழுது பெரும் மனக்குழப்பத்திற்குள்ளாகாமல், தெளிந்த நிலையில் ,எடுத்த வேலையில் வெற்றி தரும் முடிவினை எடுக்கலாம்.
- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24359&cat=1

ஞாயிறு, 25 மே, 2014

உயிர் காக்க உதவும் மருத்துவ உதவித் துறை




பாராமெடிக்கல் துறை என்பது மருத்துவர்களுக்கு உதவியாக செயல்படும் துறையாகும். பாராமெடிக்கல் படித்தவர்கள் மருத்துவர்களுக்கு உதவியாக மருத்துவம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் செயல்படுகின்றனர்.
போர்களில் காயம்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தத் துறை நவீன காலத்தில் பொதுவான மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் மாறி உள்ளது. தற்போது விபத்து மற்றும் அவசர உதவி சிகிச்சைகளுக்கு பாராமெடிக்கல் படிப்புகளை படித்தவர்களே துணைபுரிகிறார்கள்.
 
1960களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் மருத்துவர்களோடு துணை புரிவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முறையில் பயிற்சியுடன் கூடிய மருத்துவ உதவித்துறையாக உருவாக்கம் பெற்றது.  இத்துறை செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசர உதவி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 
 
மருத்துவ உதவியாளர்களின் பணி
 
முதலுதவி வாகனமான ஆம்புலன்சில் பணியாற்றுபவர்கள் பாரா மெடிக்கல் பணியாளர்களே. நோயுற்றவர் அல்லது விபத்தில் காயம்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து அவரது உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். இரத்தப்போக்கை நிறுத்தி, காயங்களுக்கு கட்டுப்போட்டு பேராபத்திலிருந்து காயம்பட்டவரை பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கிறார்.
 
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கையாள்வதற்கு உதவுகிறார். நோயாளிக்கு உடனிருப்பதிலும், அவரின் உடல்நிலையைக் கண்காணிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறார்.
 
பணிச்சூழல்
 
இன்றைய நிலையில் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனையில் மட்டுமல்லாமல் முதலுதவி வாகனம், விமானம் போன்றவற்றோடு காவல்துறை, பாதுகாப்புத்துறை, பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை  என பொதுமக்களோடு தொடர்புடைய பல்வேறு துறைகளிலும் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
 
தேவையான திறன்கள்
 
விரைவாக முடிவெடுக்கும் திறன்
தைரியமாக செயல்படுதல்
தெளிவான திட்டமிடல்
விரைவான தகவல் தொடர்புத்திறன்
அதிக அக்கறை
 
கல்வி
 
சான்றிதழ், பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலைகளில் படிப்புகள் வழங்கப்படுகிறது.
 
இளநிலையில் Ophthalmic Technician, Medical Lab Technology, Radiodiagnosis, Radiotherapy, Physiotherapy and Occupational Therapy, Audiology & Speech Therapy, Operation Theatre Technician, Hospital Documentation & Record Keeping போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.
 
பட்டய படிப்பாக Ophthalmic Technology, OT Technician, Dental Mechanics, Radioimaging, Medical Lab Technology போன்ற பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகின்றது.

- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24079&cat=1